About Me

Showing posts with label நிழல்ல. நிஜம்.... Show all posts
Showing posts with label நிழல்ல. நிஜம்.... Show all posts

Thursday, July 29, 2021

தேநீர் அனுபவங்கள். பகுதி3

 Tea shops - like local News channels!

Hot News served with our cup of  tea...

Low rate. Experience are great!

                    - Conditions apply...



'TEA' Stories... 

  'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்"- என்கிற பதம்  நாம் அறிந்தது.' தேநீர்க்கடை இல்லா தெருவே இருக்க வேண்டாம்'-ன்பது என் போன்ற தேநீர் விரும்பிகளின் விண்ணப்பம். ஆனால் பெரும்பாலும் வீதிக்கு ஒன்றாக ஒரு தேநீர்க் கடையேனும் இருக்கும். காரணம் அதிக முதலீடுகள் தேவை இல்லை. சிறுக ஆரம்பித்து பெருக்கிக் கொள்ளலாம். 
"Slow and steady wins the race" - என்பது போல செயலாற்றலாம். (முதலீடுகள் மட்டும் குறைவு. இரண்டு சக்கர வண்டியையோ, நான்கு சக்கர வண்டியையோ எளிதில் தேநீர்க் கடையாக மாற்றிவிடலாம். மற்றபடி உழைப்பு கடினமாகத்தான் இருக்கும்).

கொரோனா காலத்தில் ஆட்டோக்களும், தள்ளுவண்டிகளும் மளிகைக் கடைகளாக மாறிய விநோதங்களையும் நாம் கண்டிருப்போம். 
 கொரோனா அலையில் அலையோடு போக நாம் என்ன செத்த மீன்களா? உயிருள்ள மீன்களாக எதிர்நீச்சல் இடக் கற்றுக் கொண்டோம். எல்லாம் கடந்து போகும். கிமு & கிபி மாதிரி இனி வரும் காலம் கொரோனாவுக்கு முன் & கொரோனாவுக்குப் பின் என்று பகுக்கப்படுமோ என்னவோ? தெரியவில்லை. 
       தின வருமானத்தை நம்பியிருந்த பல்வேறு தொழில்கள் கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாயின. இவற்றுள் முடி திருத்தும் கடைகளும் தேநீர்க் கடைகளும் அடைக்கப்பட்டது பறவையை கூண்டுக்குள் அடைத்து வைப்பது மாதிரி கொடுமையாக இருந்தது.
              நான் இக்கால கட்டத்தில் முடி திருத்தக் கற்றுக் கொண்டேன்.'ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை' என்கிற மாதிரி என் மகனுக்கு நானே முடிதிருத்துபவனானேன். எனக்கு நல்ல பயிற்சி. ஆனால் மகன் வாழ்வில் நான் முடி திருத்தியது ஒரு வரலாற்றுப் பிழை. ஒரு முறை மகனுக்கு முடி திருத்தும் போது அவன் காதில் சிறிதாக கோடு போட்டுவிட்டேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் ஆடு களவாணி மாதிரி விழித்தேன். 'வீர விளையாட்டுல இதெல்லாம் ஜெகஜம்டா' - என்று சமாளித்தேன்.அவனுக்கு முடி திருத்தும் வைபவம் வீர விளையாட்டு போலத்தான் நடந்து முடியும். நல்ல வேளையாக முடிவெட்டிய சில நாட்களுக்கு என் மனைவி எந்தப்புகைப்படமும் என் மகனை வைத்து எடுக்கவில்லை!எடுத்திருந்தால்??? 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்கிற பழமொழி என்னைப் பழம் பிழிந்திருக்கும். தப்பித்தேன். 
முடிதிருத்தலை மையமிட்டு நிறைய 'மீம்சுகள்' கொரோனா காலத்தில் உலா வந்தன. அனைத்தும் சிறந்த நகைச்சுவைத் தோரணங்கள்... உங்களில் யாரேனும் நகைச்சுவைத் தோரணங்கள் கட்டியிருக்கலாம். கட்டியவர்களுக்கு' Special tea parcel'. 
ஒரு கோப்பைத் 'தேநீர்' ...
விஞ்சும் நகைச்சுவை! 


       தேநீர்க் கடைகளுக்கு சென்று வருவது எனக்கு இன்பச்சுற்றுலா சென்று வந்த உணர்வை எப்பொழுதும் கொடுக்கும். பத்து ரூபாய்க்கு ஒரு தேநீர் குடித்துவிட்டு 'Add an pack' - போல சூடான செய்திகள், கிசுகிசுக்கள், நையாண்டி நகைச்சுவைகளை அனுபவித்துவிட்டு வரலாம். 'இன்று புதிதாய் பிறந்தேன்' - என்ற மீசைக்கவி பாரதியின் வரிகள் எனக்கு தேநீர் கடைக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம்  மனதில் 'Rewind' ஆகும். இதற்கு சிறந்த உதாரணங்களாக நம் திரைப்படங்களில் இடம்பெற்ற தேநீர்க் கடைகளின் நகைச்சுவைக் காட்சிகளைச் சொல்லலாம். 
         காலம் எடுத்துக்கொண்ட சின்னக் கலைவாணர் விவேக் அவர்களுக்கும் , வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கும் தேநீர்க் கடைகள் காமெடிகளை அள்ளித் தந்த வானமாகவே இருந்தன. 
 'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?' - என்ற சின்னக் கலைவாணரின் நகைச்சுவையும், வைகைப் புயல் வடிவேலு அவர்களின் எண்ணற்ற தேநீர்க் காமெடிகளும் தொடர்ந்து ஏதேனும் இடங்களில் ஏதேனும் ஒரு சூழலில் புகுந்து பாய்ந்து வேர்களின் தாகம் தீர்க்கும் நதி போல நம்மை சந்தோசப்படுத்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. 

தேநீர் ஒரு வற்றாத ஜீவ நதி... 


              பெரும்பாலும் தேநீர் தரும்  'மாஸ்டர்களின்' உடல்மொழி ரசிக்கத்தக்கதாகவே இருக்கும். காரணம் அவர்களின் நடை, உடை பாவனைகள் அப்படி! 'மாஸ்டர்கள்' தேநீர் தயாரிப்பது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். வரிசை கட்டி நிற்கும் கண்ணாடி'டம்ளர்களில்' சிந்தாமல் சிதறாமல் பால் ஊற்றுவதும், 'டிக்காஷன்' இடுவதும், சர்க்கரையை சரியான அளவில் நிரந்திடுவதும், 'டம்ளரை  ' உயரத் தூக்கி சூடு ஆற்றுவதும் பார்ப்பதற்கு பொம்மலாட்ட மேடை நாடகம் பார்ப்பது போன்று இருக்கும். இதில் சிறப்பு என்ன தெரியுமா? வரிசை கட்டி நிற்கும்        'டம்ளர்கள்' ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருக்கும். சர்க்கரை தூக்கலாக, சர்க்கரை கம்மியாக, சர்க்கரையே இல்லாமல், சூடாக, சூடு இல்லாமல் என்று ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தயாராகும். தலை சுற்றும். 


கடைக்கு வருபவர்கள் கல்லாவில் இருப்பவரிடம் கல்லாக் கட்டாமல் மாஸ்டரிடம் கலாய்த்து கல்லாக்கட்டுவார்கள். 'மாஸ்டர்கள்' எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். புன்முறுவலோடு தான் இருப்பார்கள்.  சில தேநீர்க் கடைகளில் 'மாஸ்டர்கள்' உள்ளுர் 'மார்க்கெட்டிங் அம்பாஸிடர்களாக' செயல்படுவார்கள். ஆனால் இவ்விஷ(ய)ம் அவர்களுக்குத் தெரியாது. ' மாஸ்டர் இந்தாங்க'round neck T-shirts' போட்டுக்கங்க. கூலா இருக்கும். வெக்க தெரியாது'என்று அவர்கள்' 'brand' அச்சிட்ட 'T-Shirts' - ஐ கொடுத்துவிடுவார்கள்.ஆனால் அவைகள் 'T-shirts' அல்ல. கை வைக்காத பனியன்கள். நாள் முழுவதும் நின்றபடி 'T-shirts' அணிந்து 'டீ'  ஆற்றுவார்கள் நம்  'மாஸ்டர்கள்'. 

கொரோனா  காலத்திற்கு முன்... 

இடம்- சென்னை 
நேரம்- அந்திமாலை... 
களம்-  தேநீர்க்கடை

    இரை முடிந்து கூடடையும் பறவைகள் போல வேலை முடிந்து பெரும்பாலானோர் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம்.... 
சாலைகள் வாகனப்போக்குவரத்தால் சிக்கித் திணறிக்கொண்டிருந்தன. வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்
போது எழுப்பும் ஒலியை விட 'சிக்னலில்' நின்று கொண்டு இருக்கும்போது தான் அதிக ஒலிகள் எழுப்புகின்றன. இங்கு யாருக்கும் நிற்க நேரமில்லை. உண்மையா? பொய்யா? என்று சென்னையில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். 
       நான் அங்கிருந்து விடுபட்டு தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் புகுந்து கொண்ட கோழிக்குஞ்சு போல ஒரு தேநீர்க் கடைக்குள் புகுந்தேன். 
'மாஸ்டர் ஒரு தரைப்பலகையில் நின்றபடி தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார். ஆவி படர்ந்த பால் சட்டி முன்  நின்றபடி' மாஸ்டர்' தேநீர் ஆற்றியது பார்ப்பதற்கு நீராவி எஞ்சினை  இயக்குவது போலத் தெரிந்தது. சூடான தேநீர் என் கைக்கு வந்தது. அப்பொழுது தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு நிற்காமல் கைப்பேசியில் பேசியபடி ஒருவர் கடைக்குள் வந்தார். பார்ப்பதற்கு நடிகர் 'அல்வா வாசு' மாதிரியே இருந்தார்.கைப்பேசியை கையால் பொத்தியபடி 'மாஸ்டர் நீங்க சாப்டுற மாதிரி ஒரு டீ சுருக்குனு போடுங்க' - என்று சொல்லி விட்டு மீண்டும் கைப்பேசியைக் காதுகளுக்குக் கொடுத்த சில நொடிகளில் அவர் கைக்கு தேநீர் வர வந்தவர் 'மாஸ்டர் டீய டிராயர்ல ஏற்கனவே போட்டு வச்சிருந்தியா!' என்றபடி ஒரு மிடறு உறிஞ்சி விட்டு தரையில் இருந்த காலி தண்ணீர்' கேன்களைப்' பார்த்தபடி' மாஸ்டர் தண்ணிக் கேனெல்லாம் நல்லாப் போகுது போல! வீடுகளுக்குத் தான தண்ணிக்கேன போட்றீங்க?' - என்று கலாய்க்க 'மாஸ்டர்' நிதானமாக புன்முறுத்தபடி'கைப்புள்ள... தண்ணிக்கேனு என்ன வெல தெரியும்ல. மொதல்ல பழைய பாக்கிய கல்லாவுல கட்டு' என்றபடி கண்ணாடி 'டம்ளர்களைக்'கழுவிக் கவிழ்த்தார். கவிழ்த்து வைத்த கண்ணாடிக் குவளைகளிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அப்படியே என் பரபரப்பும் மனதை விட்டு வடிந்து ஓடியது. 
           பொதுவாக கலையைக் கற்றுக் தருபவர்களை 'மாஸ்டர்' என்று அழைப்போம். ஆனால் தேநீர் ஆற்றுபவர் எப்படி' மாஸ்டர்' ஆனார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இந்தக் கேள்வியே இப்பதிவின் திறவுகோலாகவும் அமைந்தது. திறவுகோல்கள் கேள்விகளிடம் உள்ளன. கேட்டுப் பெறலாம். திறக்கலாம். மனம் எனும் பறவை பின்னோக்கிப் பறக்கலாம். பறக்கலாமே... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பழம் நினைவுகள் உண்ணும்...
சிறகு விரிக்கும். பறக்கும்...


Irudhy.a 
                                  



Wednesday, July 21, 2021

தேநீர் அனுபவங்கள்...

Fly 


Tea had a story... 

Lot of  story begins with Tea.  Tea makes better everything. Just think with tea...

Before think... Before ink... Just  Do after drink tea..





            தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல தேநீர்க் கதைகளும் தீர்ந்து போவதே இல்லை. தேநீர் பிறந்த கதை அறிந்திருப்பீர்கள். "சீன மன்னர் ஒருவர்"-/ நிற்கவும். "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு" என்று நிறுத்தினால் மீதமுள்ள கதையை அவரவர் கற்பனைக்கு ஏற்ப எழுதிக்கொள்ளலாம். ஆனால் தேநீர் பிறந்த கதை ஒரு வானம் போல ஒரே மாதிரியாக  காணக் கிடைக்கிறது.

"சீன மன்னர் ஒருவர்" என்று நிறுத்தியிருந்தேன். இக் கதையை நான் சொல்வதை விட நீங்கள் 'நாட்டாமை கூகுள்' அவர்களைத் தொடர்பு கொண்டால் பல தகவல்களை நொடிகளில் தருவார். படித்துக்கொள்ளுங்கள். துப்பறியும் கதை போன்று சுவாரஸ்யமாக நீளும். நம் கதைக்கு வருவோம். என் கதை என்று சொல்லாமல் நம் கதை எனச் சொல்வதற்கு காரணங்கள் உண்டு. என் கதைகள் போலவே உங்களுக்குள்ளும் தேநீர்க் கதைகள் நிறைய இருக்கலாம். 

பொதுவாக யார் நம் வீட்டிற்கு வந்தாலும் தேநீர் குடிக்க கொடுப்போம். இது மதுரை மண்ணின்  கலாச்சாரம்.

         ' உட்காருங்கண்ணே. ஒரு வா 'டீ' குடிச்சிட்டு பேசுங்க' என்றதும் வந்தவர்,' தங்கச்சி இப்ப தான்' டீ' குடிச்சிட்டு வர்றேன். இப்பக்குள்ள 5 டீ குடிச்சிட்டேன்.  (டீ வேண்டாம்னு சொல்லிருப்பாரோ? '- னு நினைச்சா நீங்க கொஞ்சமா டீ குடிக்கிற ஆளு.) 

காமெடியே இனிதான்... 

' தங்கச்சி அரைக்கிளாசா கொண்டாமா. வேணாம்னா கோச்சுக்குவ. '- என்றதும் மதுரைக்கார த(எ)ங்கச்சி முழுக் கிளாசு தான் குடுப்பார். வந்தவர் சலித்துக்கொண்டு 'சொன்னாக் கேக்க மாட்ட நீ. போயி ஒரு டம்ளர எடுத்தாம்மா' என்று கறாராகச் சொல்லி வந்த டம்ளரில் ஒரே ஒரு மிடறு தேநீரைக் கவிழ்த்து அடுத்த மிடறு இறங்கும் முன் லாவகமாக எடுத்து உறிஞ்ச ஆரம்பிப்பார்.ஏற்கனவே கழுத்து வரைக்கும் இருக்கும் தேநீர். மனசு முழுக்க தேநீர் வியாபித்து இருந்தால் எப்படித் தேநீரை விட முடியும்.இது பொதுவான 'universal tea story'. இன்றும் எங்கேனும் வீடுகளில் இக்கதை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். கதையல்ல. நிஜம்...(குறிப்பாக மதுரையும் மதுரை சார்ந்த ஊர்களிலும்)


எனக்குள் இருக்கும் தேநீர்க் கதைகள் இன்றும் மனம் எனும் தேநீர்க் குடுவைக்குள் சூடு குறையாமல் இருக்கிறது. முதல் தேநீர் அனுபவம்  எனது மூன்றாம் வகுப்பு நண்பன் வீட்டில் நடந்தது.

இடம்-மதுரை.
(எம். கே. புரம். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நேரம்.
  • நண்பன் பெயர் இன்றும் ஞாபகம் இருக்கிறது. மறக்கமுடியாத பெயர். பரமசிவம். இப்பொழுது எங்கிருக்கிறான். எப்படி இருப்பான்? எதுவும் தெரியாது. ஆனால் அன்று அவன் வீட்டில் நான் சாப்பிட்ட(குடித்த) தேநீரின் சுவை இன்றும் என் நாவில் உள்ளங்கை ரேகை போல ஒட்டிக்கிடக்கிறது. 

  • பரமசிவம் வீடு
பரமசிவனின் தாயார் வாட்டசாட்டமாக இருந்தார். காதுகளில் தொங்கட்டான் அணிந்திருந்தார். கிராமத்து அப்பத்தாக்கள் சேலை கட்டுவதைப் போல கட்டியிருந்தார். என்னைக் கண்டவுடன் 'டீச்சர் மவனாப்பா? பரமு சொல்லிருக்கு. செத்த உக்காருயோவ்.' என்ற சிறிது நேரத்தில் பித்தளைக் குண்டாஞ்சட்டி நிறைய டீ எடுத்து வந்தார். கூடவே நான்கு குவளைகள். பரமசிவனுக்கும் எனக்கும் குடிக்க குடிக்க தேநீர் ஊற்றிக் கொண்டே இருந்தார். குடித்து முடித்ததும் தயாராக அடுத்த ரெண்டு குவளைகளும் நிரம்பி இருக்கும். பரமுக்கு டீ ரொம்ப உசுரு. வீட்டு மாட்டுப் பாலு தான். நல்லா குடிப்பா. பரமுவ அம்மாகிட்ட சொல்லி நல்லா படிக்க வைச்சிருங்க. இன்னும் ஊத்தவா?' என்றதும் நான் நாளைக்கு வர்றேன்'என்றபடி புறப்பட்டேன். இன்றும் தேநீர்  குறித்த கதைகள் யோசித்தால் மனம் பரமசிவத்தின் வீட்டு வாசலுக்குத் திரும்பும். உங்கள் மனதில் ஏதேனும் தேநீர்க் கதைகள் இப்பொழுது நிழலாக உங்கள் முன் விழுந்தால் நிழலில் நின்று கொண்டு சூடாக தேநீர் அருந்துங்கள். 


மனம் பறவையாகும். பழம் நினைவுகள் உண்ணும்
பறக்கும்... 







                                         Irudhy. A

நாளைய பொழுது

Www.மனப்பறவை.com 'மறுபடியும்' கட்டுரை எழுதிப் பகிர்ந்து 5நாட்கள் கடந்து போனது.   'மறுபடியும்' கட்டுரையின் தொடரியாக இக்கட்டுர...